Monday, September 28, 2009

துலாம் - Dhulam - Sanipeyarchi palangal 2009

துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலாம் ராசி அன்பர்களே!
துலாம் ராசியில் பிறந்த நீங்கள் பேசுவதற்கு முன்பே சிரிப்பு வருவது உங்கள் சிறப்பு! இயற்கையாகவே நீங்கள் சுகத்தை அனுபவிக்கக் கூடியவர் அல்ல. மற்றவர்களுக்கு சுகத்தை அளிக்கக் கூடியவர். உங்கள் புன்னகையே புகழ் பெறக் கூடியது. வாழ்க்கையில் சிறு வயதில் பெரும்பாலும் கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து வாழ்க்கையின் பிற்பகுதியில் நல்ல சுகத்தை அனுபவிப்பீர்கள். மண், மனை, வண்டி வாகன வசதியும் செல்வாக்கும் பெற்று வாழ்வீர்கள். புத்திர தோஷம் அல்லது புத்திர கவலை ஏற்படும். பெண் மக்களே அதிகம். பிணி பீடைகள் உங்களுக்கு அதிகம் வராது. சிறு சிறு நோய்கள் ஏற்பட்டு விரைவில் குணமாகும். நேரம் தவறி உணவு உட்கொள்வீர்கள். அதனால் வயிறு சம்பந்தமான கோளாறும் அஜீரணம், வாய்வு, புளியேப்பம் போன்றவையும் ஏற்படும். குடும்பத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்க வேண்டி சூழ்நிலை உருவாகும்.

வரவு- செலவு சரியாக இருக்கும். பணத்தை சேமித்து வைக்க முடியாது. ஆனாலும் நேர்மை, உண்மை, நம்பிக்கையுடன் வாழ்வீர்கள். நீண்ட நாள் கடன் வாங்கி வட்டி கட்டுவீர்கள். உயர்ந்த வாடகை, ஆடம்பர செலவுகளுக்கே வருமானம் போதாது. மிதமிஞ்சிய காம இச்சை கொண்டிருப்பீர்கள். வெகு எளிதில் ஒழுக்கம் தவறும் சூழ்நிலை ஏற்படும். கட்டுப்பாடு அவசியம். மற்றவர்களுக்கு அடங்கிப் போக மாட்டீர்கள். உங்கள் வாழ்க்கையில் அநேக ரகசியங்கள் புரிந்துகொள்ள முடியாமல் புதைந்து கிடக்கும். அதை யாருமே தெளிவாக அறிய முடியாது. நீங்கள் எதைச் செய்தாலும்- சரியோ தவறோ- சரியான காரணம் காட்டுவீர்கள். சிலகாலம் சர்வாதிகாரியாக விளங்குவீர்கள். நல்ல மனைவி அமைவாள். தினசரி செய்தி, நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள ஆர்வம் உண்டு. கணிதம், ஜோதிடம், சாஸ்திரம் ஆகியவற்றை அறிந்திருப்பீர்கள். பூஜை, புனஸ்காரத்தைக் கடைப்பிடிப்பீர்கள். பக்தியும் பொது அறிவும் அதிகம் கொண்டவர். பல நூல்களை வாங்க செலவு செய்யத் தயங்க மாட்டீர்கள். அடிக்கடி வெளியூர் பயணம் செய்வீர்கள். பல திட்டங்கள் போடுவதும் கற்பனை சிறகடிப்பதும் பயணத்தில் தான். அமர்ந்தபடியே உறங்குவீர்கள். முன்கோபம் கொண்டவர். அடிக்கடி உணர்ச்சி வசப்படுவீர்கள். திட்டமிட்டுக் காரியம் செய்தல், கடமை உணர்ச்சி, நியாயம், நேர்மை ஆகியவற்றிற்கு அதிகம் மதிப்பு தருவீர்கள். பழைய சம்பிரதாயங்களைக் கைவிட மாட்டீர்கள். அடுத்தவர்கள் துன்பம் கண்டு இரக்கத்துடன் உதவி செய்வீர்கள். ஆனால் உங்களால் உதவி பெற்றவர் உங்களுக்குத் துன்பம் செய்வது கண்டு வேதனைப்படுவீர்கள். நியாயம் வழங்குவதில் சிறந்து விளங்குவீர்கள். தெய்வபக்தி கொண்டும் பெரியோர்களிடம் மதிப்பு கொண்டும் இருப்பீர்கள்.

இதுவரை உங்களுடைய ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் இருந்த சனிபகவான் நீங்கள் நினைத்ததையெல்லாம் நடத்தி வைத்தார். உடல்நலனிலும் பாதிப்பு இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தீர்கள். கோர்ட், வம்பு, வழக்கு ஆகியவற்றில் உங்களுக்கு சாதகமான முடிவுகளே வந்தது. கடன் பிரச்சினைகளும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தீர்கள். கூட்டுத் தொழிலில் லாபமும் நன்மையும் இருந்தது. குடும்பத்தில் பொன், பொருள் சேர்க்கை உண்டானது. நண்பர்களால் உதவியும் ஆதரவும் கிடைத்தது. கணவன்- மனைவி உறவு சந்தோஷமாக இருந்தது. தாய்வழி உறவால் பண உதவியும் அனுசரணையும் இருந்தது.

இனி சனி பகவான் உங்களுடைய ராசிக்கு பன்னிரண்டாம் இடத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார். அதாவது ஏழரைச்சனி ஆரம்பமாகிறது. இது விரயச்சனி எனப்படும். அலைச்சல் அதிகரிக்கும். அடிக்கடி இடமாற்றம் வந்துகொண்டே இருக்கும். கோர்ட், கேஸ் போன்றவற்றிற்காக அதிகப்படியான வீண் விரயங்கள் செய்ய வேண்டியிருக்கும். பிள்ளைகளுக்குப் படிப்பில் தடை உண்டாகும். எந்த காரியத்தைச் செய்யத் தொடங்கினாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்ய வேண்டும். மனதில் பல யோசனைகள் தோன்றினாலும் அதைச் செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். உடல்நலம் பாதிக்க வாய்ப்புள்ளது. ஆதலால் உடல்நலனில் பாதிப்பு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்வது நல்லது. பாதங்களில் எரிச்சல், கால்வீக்கம், மூட்டுவலி போன்றவை உண்டாக வாய்ப்புள்ளது. வீடு கட்டும் பணி நடந்து கொண்டிருந்தால் அதிகப்படியான செலவுகளும், ஒரு வேலையை இருமுறை செய்யும் நிலையும் உண்டாகும். இதனால் காலவிரயமும் பணவிரயமும் உண்டாகும். நிம்மதியான உறக்கம் வராது. கெட்ட கனவுகள் தோன்றி தூக்கத்தைக் கலைத்துவிடும். குடியிருக்கும் வீடு, அலுவலகம், தொழில் ஸ்தானம் ஆகியன மாறும் சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் பிரச்சினைகளும் கருத்து வேறுபாடும் உண்டாக வாய்ப்புண்டு. ஆதலால் எச்சரிக்கையுடன் பேசுவது நல்லது. கணவன்- மனைவி இடையே பிரச்சினைகளும் சிக்கல்களும் உருவாகும். நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் தாமதமாகும். கடன் தொல்லைக்காக அல்லது அத்தியாவசிய செலவுக்காக வீட்டில் உள்ள நகைகளை அடகு வைக்கவோ அல்லது விற்கவோ நேரிடும். இதனால் குடும்பத்தில் மனக் கசப்புகளும் உண்டாகும். அதற்காக அநியாய வட்டி வாங்கும் நபர்களிடம் கடன் வாங்க நேரிடும். அவர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது.

அரசு வகையில் தொந்தரவுகளும் தடைகளும் உண்டாகும். உடன் இருப்பவர்களே உங்களுக்குத் துரோகம் செய்வார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றமும் தண்டனைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலதிகாரிகளிடமும் உடன் பணிபுரிபவர்களிடமும் கவனமாகப் பேசுவது நல்லது. செய்தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. சுமாராக இருக்கும். மூத்த சகோதரர்களுக்கு அவர்களுடைய பேச்சாலேயே பிரச்சினைகளும் சிரமங்களும் உண்டாகும். நிறுவனங்களில் உத்தியோகம் பார்ப்பவர்களுக்கும் சிரமங்களும் கஷ்டங்களும் அதிகமாகும்.

இளம் வயதினருக்குத் திருமண முயற்சிகளில் தடை உண்டாகும். மனைவிக்கு உடல்நிலை பாதிக்கும். குடும்பத்தில் குழப்பமும் சங்கடமும் உருவாகும். நண்பர்களாலும் உதவி கிடைப்பது கடினம். உங்களது உடைமைகளை கவனமாகப் பார்த்துக் கொள்வது அவசியம். உறவினர்கள் வகையில் தேவையில்லாத மனசங்கடங்களும் பிரச்சினைகளும் உண்டாகும். கௌரவக் குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. எதிரிகளால் தொல்லையும் பாதிப்பும் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளில் வில்லங்கமும் பிரச்சினைகளும் வரும். குலதெய்வ வழிபாடுதான் உங்களுக்குக் கைகொடுக்கும். குலதெய்வ வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வந்தால் தீமைகள் குறைந்து நன்மைகள் உண்டாகும்.

யாருக்கும் கடன் கொடுப்பது கூடாது. ஏனெனில் பணம் திரும்ப வருவது கடினம். பணம் வாங்கியவர்கள் உங்களை ஏமாற்றி விடுவார்கள். அரசு, வங்கி போன்றவற்றில் கடன் பெறுவதில் காலதாமதம் ஏற்படும். கையில் காசு இருந்தாலும் அடுத்த விநாடியே செலவாகிவிடும். புனித யாத்திரை சென்றுவர வாய்ப்பு உண்டாகும். இதனால் மனதிற்கு ஆறுதல் கிடைக்கும்.

சனி பகவான் மூன்றாம் பார்வையாகக் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் சண்டையும் சச்சரவும் உண்டாகும். உங்களது பேச்சாலேயே குடும்பத்தில் பிரச்சினை உருவாகும். ஆதலால் எங்கும் எப்போதும் யோசித்துப் பேசுவது சிறந்தது. குடும்ப தேவைகளுக்காகக் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். அந்தக் கடனையும் விரைவில் அடைக்க முடியாமல் சிரமப்படுவீர்கள். கண் சம்பந்தமான பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு. சிறிய குழந்தைகளின் உடல்நலனிலும் அதிக அக்கறை தேவை. இதுவரை உங்கள் பேச்சைக் கேட்டு நடந்த குடும்பத்தார் இனி அதற்கு நேர்மாறாக நடப்பார்கள். மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சனிக்கிழமைதோறும் கால பைரவரை வழிபடுவது நல்லது.

சனிபகவான் ஏழாம் பார்வையாக ஆறாமிடத்தைப் பார்ப்பதால் கடன் உண்டானாலும் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைக்க முயல்வீர்கள். நோயின் பாதிப்புகள் இருந்தாலும் அது விரைவில் தீர்ந்துவிடும். வம்பு, வழக்கு உண்டாகி நிவர்த்தி ஆகும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்குச் சுபக்கடன் வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணைக்காக மருத்துவச் செலவும் செய்ய வேண்டியிருக்கும். போட்டி, பொறாமைகளை விரட்டியடித்து வெற்றி பெறலாம்.

சனி பகவான் பத்தாம் பார்வையாக 9-ஆம் இடத்தைப் பார்ப்பதால் உங்களது தந்தைக்கு உடல்நலம் பாதிக்கும். அதனால் மருத்துவ விரயங்களும் உண்டாகும். தந்தையிடம் கருத்து வேறுபாடுகளும் பிரச்சினைகளும் உண்டாகும். தந்தையுடன் சேர்ந்திருந்தால் மேற்கூறிய பிரச்சினைகள் வரும். தந்தையும் மகனும் தனியாகவோ அல்லது இருவரில் யாரேனும் ஒருவர் வெளியூரிலோ வெளியிடங்களிலோ இருந்தால் பிரச்சினைகள் வராது. கௌரவக் குறைவு வராமல் சமாளிக்கலாம். பூர்வீகச் சொத்துக்கள் சில விரயமாகும். புனித ஸ்தல யாத்திரை செல்வதும் தெய்வ வழிபாடு, பூஜை அனுஷ்டானங்களும் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்கும்.

உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2009- செப்டம்பர் முதல் பத்து மாதகாலம் சனி உத்திர நட்சத்திரத்தில் சஞ்சாரம். இது சூரியனின் நட்சத்திரம். சூரியன் உங்கள் ராசிக்கு 11-க்குடையவர். எனவே இக்காலம் தனலாபம், வழக்குகளில் வெற்றி, புதிய முயற்சிகளில் அனுகூலம், தந்தை வழி ஆதரவு ஆகிய நற்பலன்களை எதிர்பார்க்கலாம். மூத்த சகோதர வகையில் சாதகமான பலனையோ அல்லது பாதகமான பலனையோ சந்திக்கக்கூடும். ஜாதக தசாபுக்திகள் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருப்பதை அனுசரித்து மேற்கண்ட பலன்கள் அமையும்.

அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2010- ஜூலை முதல் 14 மாதகாலம் சனி துலா ராசிக்கு 10-க்குடைய சந்திரன் சாரத்தில் (அஸ்த நட்சத்திரத்தில்) சஞ்சரிப்பார். தொழில், வாழ்க்கை அமைப்பில் உங்கள் கனவுகளும் திட்டங்களும் நிறைவேறும். புதிய முயற்சிகள் கைகூடும். தொழில் சிர்திருத்தம் உண்டாகும். புதிய மணமக்கள் தனிக்குடித்தனம் போகலாம். கூட்டுக் குடும்பத்தில் பாகப்பிரிவினைகள் உருவாகலாம். தாயார் அல்லது தாய்வர்க்கத்தில் பீடை, பிணி போன்றவை ஏற்பட்டு குணம் உண்டாகலாம்.

சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2011- செப்டம்பர் முதல் ஆறு மாதகாலம் சனி பகவான் துலா ராசிக்கு 2, 7-க்குடைய செவ்வாயின் சாரத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். ஒரு பகுதி சிறப்பாகவும் மறுபகுதி வெறுப்பாகவும் பலன் காணப்படும். குடும்பத்தில் சுபமங்களக் காரியங்களான திருமணம், வாரிசு யோகம், சிமந்தம், ருதுமங்கலம், வாகன யோகம் போன்ற நன்மைகளும் உண்டாகும். அது சம்பந்தமாகப் புதிய கடன்களும் உண்டாகும். தசாபுக்திகள் மோசமாக இருந்தால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம். திருமணம் ஆகவேண்டியவருக்குத் திருமண யோகம் ஏற்படும்.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப்பெயர்ச்சி ''ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்; வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்'' என்பது மாதிரி, ''யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்'' என்று சவால் விட்டு சாதனை புரியச் செய்யும். உங்கள் சபதம் ஜெயிக்கும்.

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப்பெயர்ச்சி தேக சௌக்கியம், வாழ்க்கை முன்னேற்றம், தொழில் முன்னேற்றம், உற்றார்- உறவினர் நட்பு, தாராளமான வரவு- செலவு ஆகிய யோகங்களையும் கொடுத்து சமயத்தில் தேக சௌக்கியத்தையும் குறைக்கும்.

விசாக நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப்பெயர்ச்சி கடன்களை அதிகரிக்கச் செய்யும். மறைமுக எதிர்ப்பு, இடையூறுகளைத் தரும். போட்டி, பொறாமைகளை ஏற்படுத்தும். நம்பிக்கையும் தைரியமும் வைராக்கியமும்தான் உங்களைக் காப்பாற்றும்.

பரிகாரம்
மதுராந்தகம்- செங்கல்பட்டுக்கு இடையில், மேல்மருவத்தூரிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள வடதிருநள்ளாறு என்ற திருத்தலத்திற்குச் சென்று சனீஸ்வரரை வழிபடலாம். மேட்டுப்பாளையம் அருகில் உள்ளது.