Monday, September 28, 2009

ரிஷபம்- Rishabam - Sanipeyarchi palangal 2009

ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசி அன்பர்களே!
ரிஷப ராசியில் பிறந்த நீங்கள் புதிய நண்பர்களுடனோ அல்லது விருந்தாளிகளுடனோ திடீரென்று பழகுவது சிரமமே. பழகிவிட்டால் சகஜமாகப் பழகி மனதில் இடம் பிடித்து விடுவீர்கள். உங்களைப் புகழ்ந்து பேசினால் மயங்கி விடுவீர்கள். பிறருக்கு அடி பணிவது உங்களுக்குப் பிடிக்காத செயல். நேர்மையுடன் வாழ்வதே உங்களுக்குப் பிடித்தமானதாகும். தர்க்கம், விதண்டாவாதம் செய்வதில் கெட்டிக்காரரான நீங்கள் எந்தப் பக்கமும் பேசி வெற்றி பெறுவீர்கள். சாதுவான குணம் கொண்ட உங்களைச் சிண்டி விட்டால் பயங்கரமான கோபம் கொள்வீர்கள்! பார்ப்பதற்கு சாதாரண ஆளாக இருப்பினும், எதிர்த்தவர்களின் பலம் குறையும்வரை விரட்டி அடிப்பீர்கள். நடந்ததை உலகம் பூராவும் சொல்லிச் சொல்லி அவமானப் படுத்துவீர்கள். அதனால் யாருமே உங்களிடம் மோதிப் பார்க்க அஞ்சுவார்கள். வயதில் சிறுவராக இருப்பினும், அந்தஸ்த்தில் குறைந்து இருப்பினும் உங்களுடைய புத்திமதிகளை யாவரும் ஏற்று உங்களைப் போற்றிப் புகழ்ந்திடுவார்கள். உங்கள் கை ராசியானது அடுத்தவர்களுக்கு மட்டுமே பலன் தரும்- பயன் தரும்! உங்களுக்கு அல்ல!

வாக்கு ஸ்தானம் புதன் என்பதால் சிரித்துப் பேசியே யாவரையும் கவர்ந்துவிடுவீர்கள். ஆடம்பரப் பிரியராக இல்லாவிட்டாலும் பார்வைக்கு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தது போன்ற தோற்ற அமைப்பு கொண்டவராகக் காணப்படுவீர்கள். மிகவும் வெண்மையான உடைகளை அதிகம் விரும்புவீர்கள். பணத்தை அதிகம் செலவழிக்க மாட்டீர்கள். உங்களுடைய சகிப்புத்தன்மையும் பொறுமையுமே உங்களுடைய வெற்றிக்குக் காரணம். எக்காரியத்தை எடுத்தாலும்- அது மற்றவர்களுக்காக இருந்தாலும் சரி; உங்களுக்காக இருந்தாலும் சரி - அதில் உண்மையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். நீங்கள் மற்றவருடைய அபிப்ராயத்திற்குச் செவிசாய்க்க வேண்டும். மற்றவர்களுக்காக உழைப்பதைவிட உங்களுக்காகவும் உழைக்க வேண்டும். கருத்து வேறுபாடு உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். நீங்கள் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. இதுவரை உங்களுக்கு இருந்து வந்த அவப்பெயர் நீங்கி கௌரவமும், மரியாதையும் கூடும். புதிய தொழில் தொடங்க முனைவோர் முதலீடு இல்லாமலேயே தொழில் தொடங்க தாராளமாக வழிவகை பிறக்கும். வேலையில் மனதிற்குப் பிடித்த இடத்தில் மாற்றமும், பதவி உயர்வும் உண்டாகும். பலரும் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். கணவன் - மனைவி இடையே பிரச்சினைகள் தீர்ந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். அன்பு பெருகும். வாழ்க்கைத் துணையின் சொந்தங்களால் பல உதவிகள் கிடைக்கும்.

இதுவரை உங்கள் ராசிக்கு 4-ல் அர்த்தாஷ்டமச் சனியாக இருந்த சனி இப்போது 5-ஆம் இடத்தில் திரிகோணம் பெறுவார். நாலாமிடத்தில் இருந்த சனிபகவான் அதிக அலைச்சலையும் மன உளைச்சலையும் கொடுத்தார். வீடு, வண்டி வாகனம் ஆகியவற்றில் வீண் விரயங்களையும் ரிப்பேர் செலவுகளையும் கொடுத்தார். உடல் நிலையிலும் பாதிப்பு உண்டானது. வயிறு சம்பந்தமான கோளாறுகளும் நரம்பு சம்பந்தமான கோளாறுகளும் ஏற்பட்டது. முதுகுத் தண்டுவடம், இடுப்பு சம்பந்தமான தொல்லைகளும் அறுவை சிகிச்சை செய்யும் அளவு பாதிப்பும் ஏற்பட்டது. அடிக்கடி வெளியூர் பயணங்களும் அதனால் கூட அவஸ்தைகளும் உண்டானது. எதிர்பாராத திருப்பங்களையும் சந்தித்த நிலை! தாயாரின் உடல்நிலையிலும் சங்கடம், பாதிப்பு உண்டானது. இருப்பிடம், செய்தொழில், உத்தியோகம் ஆகியவற்றில் நிலையான அமைப்பும் வருமான யோகமும் இருந்ததால்- பணவசதி தாராளமாக இருந்ததால் அர்த்தாஷ்டமச் சனியின் தொல்லைகளையெல்லாம் தாங்கிக் கொண்டு சமாளிக்கும் சக்தி ஏற்பட்டது.

இப்போது சனிபகவான் உங்களது ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்குப் பெயர்ச்சி ஆவதால் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள், சிக்கல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாகத் தீரும். குலதெய்வத்தின் அருளால் எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிப்பீர்கள். குலதெய்வ அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். இழந்த கௌரவத்தை மீண்டும் பெறுவீர்கள். மனதில் எண்ணிய காரியங்கள் யாவும் மனத்திருப்தியாக நிறைவேறும். மனதில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும்.

கன்னிச் சனி 11-ஆம் இடத்தைப் பார்ப்பதால் மூத்த சகோதர - சகோதரி வகையில் நன்மையும் உதவியும் கிடைக்கும். 10-க்குடையவர் 11-ஆம் இடத்தைப் பார்ப்பதால் செய்தொழிலில் முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். புதிய திட்டங்கள் வகுத்து சொந்தத் தொழிலை விரிவுபடுத்தலாம். வேலை, உத்தியோகத்தில் உங்களுக்கு அனுகூலமான திருப்பங்களும், மேலதிகாரிகளின் அனுசரணையும் ஆதரவும், பாராட்டும் கிடைக்கலாம்.

6-ஆம் இடத்துக்கு 12-ல் சனி வந்திருப்பதால் கடன் பிரச்சினைகள் தீரும். (கடன் விரயம் ஆகும்.) அதே போல இதுவரை எதிரிகளால் இருந்த மறைமுகத் தொல்லைகளும் இடையூறுகளும் விலகிவிடும். வேலை இல்லாதிருந்தோருக்கு வேலை வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு வெளியூரில் அல்லது வெளிநாட்டில் வேலை அமைப்பு உருவாகும். மனதில் நிலவிய கசப்பான நிகழ்ச்சியின் நினைவுகளை மறந்து தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். இதுவரை பதுங்கும் புலியாக ஒதுங்கியிருந்த நீங்கள் இனி பாயும் புலியாக மாறி சாதிக்கலாம். உங்களைவிட்டு விலகிச் சென்றவர்களும் தானாக வந்து நட்பு கொண்டாடுவார்கள். கருத்து வேறுபாடு காரணமாக பகையாக இருந்தவர்களும் மனம்மாறி உறவு கொண்டாடி வருவார்கள். புதியவர்களின் நட்பும் கிடைக்கும்; நட்பினால் நன்மையும் அனுகூலமும் இருக்கும்.

தாயாரின் உடல்நிலையில் இருந்த பாதிப்புகளும் நீங்கிவிடும்; இனி ஆரோக்கியமாக இருப்பார். பூர்வீகச் சொத்து விவகாரம், வில்லங்கம், பிரச்சினைகள் விலகி அதனால் பலன் அடையலாம். சொத்தில் ஒரு பகுதியை விற்பதால் லாபம் கிடைத்து கடன் பிரச்சினையும் தீர்த்துவிடலாம். சிலர் பழைய வண்டி வாகனங்களை நல்ல விலைக்கு விற்றுப் புதிய வாகனங்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ரொக்கமாகவோ தவணையாகவோ புதிய வாகனங்களை வாங்கலாம். தாய்வழிச் சொந்தம் - தாய்மாமன் வகையில் அனுகூலமும் ஆதாயமும் நன்மையும் உண்டாகும். 5-ஆம் இடம் மாமன் ஸ்தானம், பாட்டனார் ஸ்தானம். பாட்டனார் வகையிலும் நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

ரிஷப ராசிக்கு யோக ஆதிபத்தியம் பெறும் சனி (தர்மகர்மாதிபத்தியம் 9, 10-க்குடையவர்) 5-ஆம் பாவத்துக்கு 5, 6-க்குடையவர் என்பதால் ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் யோகத்தைச் செய்வார். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் அவரே அந்த பாவத்துக்குக் கெடுதலையும் செய்வார். தீக்குச்சி விளக்கை ஏற்றவும் பயன்படும்- குடிசையை எரிக்கவும் பயன்படும். அது பயன்படுத்துகிறவரின் தன்மையைப் பொறுத்தது.

குழந்தைகளுக்கு மருத்துவச் செலவுகள் உண்டாக வாய்ப்பு உண்டு. ஆதலால் குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக் கொள்வது அவசியம்! சிறு நோய் நொடி என்றால்கூட உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது. பெரிய பிள்ளைகளால் சிறுசிறு தொல்லைகள் உண்டாகும். என்றாலும் சில சமயம் அது அன்புத் தொல்லையாக அமையலாம். உடல்நலத்துக்காகப் பத்தியம் காப்பதுபோலவும் அமையலாம்.

தாயாருக்கு சனி பெயர்ச்சியின் முற்பகுதி சிரமமாக இருந்தாலும் பிற்பகுதி சிறப்பாக இருக்கும். புனித ஸ்தலங்களுக்கு தெய்வத் திருத்தல வழிபாடு, தீர்த்த யாத்திரை சென்றுவரும் யோகம் உண்டாகும். ஞானிகள், சாது சந்நியாசிகள், மத குருமார்களின் ஆசியைப் பெறும் வாய்ப்பும் கிடைக்கும். தந்தைக்கும் உத்தியோகத்தில் உயர்வும் முன்னேற்றமும் உண்டாகும். தொழில் துறையிலும் லாபம் உண்டாகும். புதிய கௌரவப் பதவிகள் கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடப் பெயர்ச்சியும் ஏற்படலாம். அதற்காக தவிர்க்க முடியாத அலைச்சலையும் பிரயாசையையும் சந்திக்க நேரும். அலைச்சல் இருந்தாலும் அதற்குத் தகுந்த ஆதாயமும் இருக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும்.

கடன் வகையில் (நீங்கள் கொடுத்த கடன்) உங்களுக்கு வரவேண்டியவை- பாக்கி சாக்கிகள் வசூலாகும். அன்னிய மதம், அன்னிய இனத்தவரால் அனுகூலம் எதிர்பார்க்கலாம். சனி பகவான் 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பணத்தட்டுப்பாடு வராது. 2-ஆம் இடமான மிதுனத்துக்கு சனி 8, 9-க்குடையவர். 2-ஆம் இடமும் புதன்வீடு. சனி நிற்கும் 5-ஆம் இடமும் புதன்வீடு. அத்துடன் 8-க்குடையவர் 5-ல் நின்று 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் அதிர்ஷ்டமான வழிகளில் தன வரவுக்கு இடமுண்டாகும். வக்கீல்கள், வாத்தியார்கள், கமிஷன் புரோக்கர்கள், மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவ், எல்.ஐ.சி. ஏஜெண்டுகள் போன்ற வாக்கினால் ஜீவனம் செய்கிறவர்களுக்கு இக்காலம் அபரிமிதமான தனயோகம் உண்டாகும்.

10-ஆம் இடத்துக்குரிய சனி, அந்த ஸ்தானத்துக்கு 8-ல் மறைவதால் செய்யும் சொந்தத் தொழிலில் சிறுசிறு பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடும். அரசு அதிகாரிகளின் விசாரணைகளைச் சமாளிக்க வேண்டும். இருந்தாலும் 10-ல் குருவும் ராகுவும் சேரும் காலம் சனி தோஷவேகம் குறைந்துவிடும். எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அவற்றைப் பணத்தாலும் அரசியல் பிரமுகர்களாலும் சமாளித்துவிடலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுக்குக் கீழ் வேலை செய்கிறவர்களிடம் சுமூகமாகவும் அரவணைத்தும் நடந்து கொள்வது நல்லது. ஏனெனில், சமயத்தில் உங்களிடம் காப்பி, டீ வாங்கிக் குடித்துவிட்டே மேலதிகாரியிடம் உங்களைப் பற்றித் தவறான தகவல்களைக் கொடுத்து உங்கள் முன்னேற்றத்துக்குத் தடை ஏற்படுத்தலாம்.

சனிபகவான் 3-ஆம் பார்வையாக 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால், 7-ஆம் இடத்துக்கும் ரிஷப ராசிக்கும் சனி யோகாதிபதி என்பதால், திருமண முயற்சிகளில் ஆரம்பத்தில் தடை தாமதம் ஏற்பட்டாலும் முடிவில் சுபமாக நிறைவேறும். இதை எப்படி நடத்தப் போகிறோம் என்று ஆரம்பத்தில் மலைப்பாகத் தெரியும். பல சம்பவங்கள், நடந்து முடிந்தபிறகு அற்புதமாக இருந்தது என்று மற்றவர்களின் பாராட்டுக் கிடைக்கும்போது, எல்லாம் தெய்வத்தின் கருணை என்று நன்றி செலுத்துவீர்கள். அப்படித்தான் நினைக்க வேண்டும். அதை விட்டு. ''என் சாமர்த்தியம்'' என்று தற்பெருமைக்கு அடிமையாகிவிட்டால் சனி பகவானின் சாபத்துக்கும் கோபத்துக்கும் ஆளாக நேரிடும்.

திருமணம் ஆனவர்களுக்கு மனைவியால் கணவனுக்கும் - கணவனால் மனைவிக்கும் லாபமும் நன்மையும் அனுகூலமும் உண்டாகும். அவர்கள் பேரில் சொத்து சுகம் வாங்கும் யோகமும் அமையும். புதிய தொழில் ஆரம்பிக்கும் யோகமும் ஏற்படும். அல்லது தொழில் துறையில் கணவன் அல்லது மனைவியைக் கூட்டாக இணைத்து ரிக்கார்டு செய்யும்படி ஆடிட்டர் ஆலோசனையைப் பெறலாம். கணவன்- மனைவிக்குள் நிலவிய கருத்து வேறுபாடுகள் விலகும். பிரிந்த தம்பதிகள் இணைந்து வாழலாம்.

உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2009- செப்டம்பர் முதல் சுமார் பத்து மாத காலம் சனி பகவான் ரிஷபராசிக்கு 4-க்குடைய சூரியன் சாரத்தில் சஞ்சரிப்பார். உடல்நலமும் மனநலமும் சிறப்பாக இருக்கும். செய்தொழிலில் நல்ல முன்னேற்றமும்- புதிய கிளைகள் தொடங்கவும் வாய்ப்பு உள்ளது. வேலையில் ஆர்வமும் அக்கறையும் உண்டாகும். பாராட்டும் உயர்வும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். தடைகள் விலகும். தகப்பன் - பிள்ளைகள் உறவில் நெருக்கமும் இணக்கமும் உண்டாகும். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியமான ஆடம்பர அலங்காரப் பொருள்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தாயார் வகையில் சுபச் செலவுகள் ஏற்படும். வாகனப் பரிவர்த்தனை யோகமும் அமையும்.

அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2010- ஜூலை முதல் 14 மாதகாலம் சனி பகவான் ரிஷபராசிக்கு 3-க்குடைய சந்திரன் சாரத்தில் சஞ்சரிப்பார். இக்காலம் சகோதர - சகோதரி வகையில் நிலவிய சஞ்சலங்களும் சச்சரவுகளும் விலகி சமரச உடன்பாடு நிலவும். அன்னிய நண்பர்களின் உதவியும் சலுகைகளும் சகாயமும் எதிர்பார்க்கலாம். 3-ஆம் இடம் என்பது 4-ஆம் இடத்துக்கு விரய ஸ்தானம் என்பதால், சிலருடைய உடல் நலத்தில் பிரச்சினை உருவாகும். ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்ளலாம். அல்லது தன்வந்திரி மஹா மந்திரத்தை தினசரி ஜெபம் செய்வதோடு, ஒரு நோட்டில் எழுதி வாலாஜா பேட்டையிலுள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்துக்கு அனுப்பலாம். கடகம் - ரிஷப ராசியின் 7-ஆம் இடத்துக்கு திரிகோணம் என்பதால் திருமண முயற்சிகள் கைகூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப்பலன்
2011- செப்டம்பர் முதல் ஆறு மாத காலம் கன்னிராசியில் சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் செய்வார். சித்திரை செவ்வாயின் நட்சத்திரம். ரிஷப ராசிக்கு செவ்வாய் 7, 12-க்குடையவர். 7-க்கு 11-ல்- 12-க்கு 6-ல் சனி இருப்பதாலும், 7-ஆம் இடத்தை சனி பார்ப்பதாலும் திருமணம் ஆகவேண்டியவர்களுக்குத் திருமண யோகமும் திருமணம் ஆகாதவர்களுக்கு மனைவி அல்லது கணவர் வகையில் யோகமும் அதிர்ஷ்டமும் உண்டாகும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் குடும்பப் பிரச்சினையும் குழப்பமும் ஏற்படலாம். என்றாலும் ரிஷப ராசிக்கு சனி யோகாதிபதி என்பதால், ''கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்'' என்ற அடிப்படையில் முடிவில் நல்லதாக அமையும் சுப விரயம் எனலாம். அதன் வகையில் சுபச்செலவும் வரலாம். அதற்காகக் கடன் வாங்கும் அவசியமும் ஏற்படலாம்.

கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப்பெயர்ச்சி ஆரம்பத்தில் தடையும் தாமதமும் கொடுத்தாலும் பிற்பகுதியில் வெற்றியும் நிறைவையும் ஏற்படுத்தும். அலைச்சலும் திரிச்சலும் இருக்கும். அதனால் பயனும் பலனும் உண்டு. தேக நலனில் பிரச்சினை ஏற்பட்டால் தன்வந்திரியை வழிபடவும்.

ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனி பெயர்ச்சி செல்வாக்கு, புகழ், கீர்த்தி, கௌரவத்தை உண்டாக்கும். சமுதாயத்தில் வி.ஐ.பி. அந்தஸ்தை உருவாக்கும். அரசியல் ஈடுபாடு அல்லது முக்கிய திருப்பணி பதவிகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படுத்தும்.

மிருகசிரிட நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப்பெயர்ச்சி குடும்பத்தில் மகிழ்ச்சியையும் திருப்தியையும் ஏற்படுத்தும். செல்வாக்கு சிறக்கும். பதவி யோகமும் தனயோகமும் உண்டாகும். சிலருக்கு தசா புக்திகள் மோசமாக இருந்தால் உடல்நிலை பாதிக்கும். அதற்குரிய பரிகாரத்தைச் செய்வது நல்லது.

பரிகாரம்
நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் என்ற ஊரில் (சாமியார்கரடு ஸ்டாப்) தத்தகிரி முருகன் கோவில் உள்ளது. ஏழரை அடி உயர சனியும் அவருக்கு எதிரில் ஒன்பது அடி உயரத்தில் பஞ்சமுக ஆஞ்சனேயர் சந்நிதியும் உண்டு. அங்கு சென்று வழிபடலாம்.