Monday, September 28, 2009

மகரம்- Magaram - Sanipeyarchi palangal 2009

மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசி அன்பர்களே!
மகர ராசியில் பிறந்த நீங்கள் சொல்லில் உறுதி கொண்டிருப்பீர்கள். சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வீர்கள். இசை ஞானம் கொண்டவர். இசையில் ஆர்வம் உண்டு. கடன் பெறுவதும் மற்றவருக்குக் கடன் கொடுப்பதும் உங்களுக்குப் பிடிக்காத செயல்களாகும். சகோதரர்களிடமிருந்து பிரிந்து வாழ்வீர்கள். அவர்களால் பண உதவியோ ஆதரவோ கிட்டாது. அன்னையின் அன்பும் ஆதரவும் நன்கு அமையும். ஆனால் தாய்க்கு அடிக்கடி பிணி, பீடை வாட்டிவிடும். நீங்கள் ஆடம்பர வசதியையோ செல்வச் சிறப்பையோ விரும்ப மாட்டீர்கள். தனிமையையும் அமைதியான வாழ்க்கையையும் விரும்புவீர்கள். கிடைத்ததைக் கொண்டு திருப்தியாக வாழ்வீர்கள்.

சுயமாக வீடும் வாகனமும் நன்கு அமையும். கல்வியில் தேர்ச்சி பெற்று உயர்தரக் கல்வியும் பயில வாய்ப்புண்டு. பெண் சந்ததியே அதிகம் இருக்கும். மக்கள் அனைவரும் நல்ல புகழ், செல்வம் பெற்று வாழ்வார்கள். புத்திர, புத்திரிகளின் பரிபூரண அன்பைப் பெறுவீர்கள். பித்தம், உஷ்ணம் சம்பந்தமான பிணிகள் நடு வயதிற்கு மேல் ஏற்படும். கடன் தொல்லை, பகை- விரோதம், கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிக்கல் ஏற்படும். உயர்ந்த ஞானமும் தெளிந்த அனுபவமும் மிகுதியாகக் கொண்டிருப்பீர்கள். ஆரம்பகாலத்தில் ஆதரவற்ற வாழ்க்கையாய் இருந்தாலும் சில காலத்திற்குப் பின் சுகமும் உற்சாகமும் குறையாமல் முன்னேறி வாழ்வீர்கள்.

சுயநலம் கொண்டிருப்பீர்கள். அவசர புத்தியினால் தீய விளைவைச் சந்திப்பீர்கள். கற்பனை வளம் மிகுந்தும் எதையும் சோதனை செய்து பார்ப்பதில் ஆர்வமும் கொண்டிருப்பீர்கள். சிலவேளைகளில் நிலையான குணமில்லாமல் காலத்தை வீணாக்குவீர்கள். மற்றவர்களைச் சுலபமாக நம்பமாட்டீர்கள். ஆன்மிகத்தில் பற்று கொண்டிருப்பீர்கள். கோவில், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்ய மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பீர்கள். உங்களை உயர்வாக எண்ணிக் கொள்ளும் தற்பெருமை கொண்டிருப்பீர்கள். புகழ்ச்சிக்கு மயங்குவீர்கள்.

எதையும் பெரிய அளவில் செய்யும் திறன் கொண்டிருப்பீர்கள். அது மற்றவர்களைப் பாதிக்கவும் செய்யும். எதிர்பாராத செல்வம் தேடி வரும். வாழ்க்கையில் அநேக கஷ்டங்களைச் சந்தித்து முன்னேறுவீர்கள். உயர்ரக ஆடைகளையே உடுத்துவீர்கள். சுவை குன்றாத உணவுப் பொருட்களையே நேரம் தவறாமல் உட்கொள்வீர்கள். தன்னம்பிக்கை மிகுந்தும் உழைப்பில் நம்பிக்கை கொண்டும் இருப்பீர்கள். மற்றவர்கள் தீங்கு செய்தாலோ அவமதித்தாலோ மன்னிக்க மாட்டீர்கள். அவர்கள் உங்கள் காலில் விழும்வரை வைராக்கியத்துடன் வாழ்ந்து காட்டுவீர்கள். மற்றவரிடம் சொல்லி அவர்களை அவமானப்படுத்துவீர்கள். உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ற மனைவி அமைவாள்.

இதுவரை உங்களது ராசிக்கு எட்டாமிடத்தில் அஷ்டமச்சனியாக இருந்து வந்த சனி பகவான் உங்களுக்குப் பல பிரச்சினைகளையும் சிக்கல்களையும் அதிகமாகவே தந்தார். பதவியில், உத்தியோகத்தில் பிரச்சினைகளும் இடமாற்றமும் அலைச்சலும் இருந்தது. ஏமாற்றம், விரயம் இருந்தது. தாயாருக்கு உடல் நிலை பாதித்து, அதனால் மன தைரியம் இழந்து தேவையற்ற வீண் குழப்பங்களுடன் காணப்பட்டீர்கள். வீடு மாற்றம், அலுவலக மாற்றம், தொழில் மாற்றம் ஏற்பட்டது. வசதியான வீட்டில் இருந்தவர்கள் சிலர் இடமாற்றத்தால் வசதிக் குறைவான வீட்டிற்குக் குடிபோகும் சூழ்நிலை ஏற்பட்டது. செய் தொழிலில் நஷ்டங்களும் இழப்புகளும் ஏற்பட்டது.

இப்போது சனி பகவான் உங்களது ராசிக்கு ஒன்பதாமிடமான பாக்ய ஸ்தானத்திற்குப் பெயர்ச்சியாகிறார். உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் யாவும் தீர்ந்துவிடும். பதவியில் கௌரவமும் மதிப்பும் கூடும். புதிய பதவிகள் கிடைக்கும். தைரியமும் வீரியமும் அதிகமாகும். பெரியோர்களின் சொற்படி கேட்டு நடப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெறுவார்கள். முன்பிருந்ததைவிட தற்போது அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள். பட்டப்படிப்பு படிக்கவும் வாய்ப்புகள் தேடிவரும். மனதில் தெளிவும் நிம்மதியும் பிறக்கும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் அல்லது விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. நீங்கள் மனதில் எண்ணிய காரியங்கள் யாவும் படிப்படியாக வெற்றியடையும். கணவன்- மனைவி இடையே சிற்சில பிரச்சினைகள் உருவாக வாய்ப்புண்டு. யாரேனும் ஒருவர் அமைதியாக இருப்பது நல்லது. இல்லையெனில் பேச்சால் பிரச்சினை வளர்ந்து கருத்து வேறுபாடு அல்லது பிரிவு வரை கொண்டு வந்துவிடும். வாழ்க்கைத் துணைக்குப் பணப் பிரச்சினைகள் இருக்க வாய்ப்புண்டு. பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. சகோதரர்களால் தேவையான உதவியும் அனுகூலமும் கிடைக்கும்.

வீடு, வண்டி வாகனம் ஆகியவற்றில் சிற்சில செலவுகளும் புதிதாக வீடுகட்டும் அமைப்பும் உண்டாகும். வாகனத்தை மாற்றவோ அல்லது புதிதாக வாகனம் வாங்கவோ முயற்சி செய்வீர்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். செல்லும் இடத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடிக் கொண்டே போகும். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவர். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். தாயாருக்கு சிற்சில உடல் உபாதைகள் உண்டாக வாய்ப்புண்டு. இருப்பினும், உடல் உபாதைகள் நிரந்தரமாக இல்லாமல் உடனே நிவர்த்தியாகிவிடும். தாயாருக்கு அலைச்சல் அதிகமாகும். சொந்தங்களால் சில மரியாதைக் குறைவும், உங்கள் பேச்சுக்கு மதிப்பு இல்லாமலும் போக வாய்ப்புண்டு. ஆதலால் உங்களது மதிப்பு குறையாமல் நடந்து கொள்ளுங்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்க செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். சில பொருட்களுக்காக வெளியில் வட்டிக்கு கடன் வாங்கும் சூழ்நிலையும் உருவாகும்.

ஆடம்பரப் பொருட்களை முடிந்தவரை வாங்காமல் இருந்து பணத்தைச் சேமிக்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் நீங்கள் எதிர்பாராத அளவிற்கு கடன் வளர்ந்துவிடும். நண்பர்களிடம் உதவியை எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் ஏற்கெனவே வெளியில் வாங்கியிருந்த கடனை அடைப்பதற்குச் சிரமப்படுவீர்கள். இருப்பினும் மெல்ல மெல்ல ஓரளவிற்கு கடனை அடைத்து நிலைமையைச் சமாளிப்பீர்கள். உங்களது கௌரவம் பாதிக்காமல் பார்த்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் கல்விக்காகக் கடன் வாங்க நேரிடும். வம்பு, வழக்கு சம்பந்தமான பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால் அவற்றை பெரியோர்களின் முன்னிலையில் பஞ்சாயத்து பேசி தீர்த்துக் கொள்ளலாம். பூர்வீகச் சொத்துகளால் கௌரவமும் ஆதாயமும் இருக்கும். பல வருவாயும் கிடைக்கும். தந்தைக்கு அவருடைய நண்பர்களால் உதவியும் அனுகூலமும் உண்டாகும். தந்தை கூட்டுத் தொழில் செய்து கொண்டிருந்தால் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம். தந்தைக்கு அலைச்சலால் சிறிது உடல்நலம் பாதிப்புகள் ஏற்பட்டு பின் சரியாகும். தெய்வ ஸ்தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். மூத்த சகோதர்களுக்கு நன்மை உண்டாகும். கௌரவமும் அந்தஸ்தும் கூடும். மூத்தோர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வம்பு, வழக்குகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

குடும்பத்தில் சிற்சில குழப்பங்களுடன் சங்கடங்களும் உண்டாக வாய்ப்புண்டு. எங்கு பேசினாலும் கவனமுடன் பேசுவது நல்லது. இல்லையெனில் வீண் பிரச்சினைகள் உண்டாக வாய்ப்புண்டு. பணப் பற்றாக்குறை அவ்வப்போது ஏற்படும். செய்தொழிலில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அதிக செலவுகளைச் செய்ய வேண்டி இருக்கும். வேலை தேடி அலைந்தவர்களுக்கு தற்போது நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. குறுக்கு வழியைத் தேட வேண்டாம். நேர்மையாகவே செயல்படுங்கள். உங்கள் தகுதிக்கேற்ப வேலை கிடைக்கும்.

சனி பகவான் 3-ஆம் பார்வையாக உங்களது ராசிக்கு லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால் செய்தொழிலில் லாபங்கள் குறைந்து காணப்படும். மூத்த சகோதரர்கள் தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மூத்த சகோதரர்களுக்கு உடல்நிலையில் பாதிப்புகள் தோன்ற வாய்ப்புண்டு. உங்களுக்கு உள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்து கொள்ள முயன்றாலும் விரைவில் தீராமல் இழுபறி நிலையாக இருக்கும். வரவேண்டிய லாபங்கள்கூட வராமல் இருக்கும்.

சனி பகவான் 7-ஆம் பார்வையாக உங்களது ராசிக்கு தைரிய- வீரிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் உங்களுக்குத் தைரியமும் வீரியமும் அதிகமாகும். எக்காரியத்திலும் துணிந்து இறங்குவீர்கள். எவரைப் பற்றியும் கவலைப் படமாட்டீர்கள். சமூகத்தில் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் எதிர்த்து நிற்பீர்கள். உத்தியோகத்தில், பதவியில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வும் சலுகைகளும் ஊதிய உயர்வும் நிச்சயம் கிடைக்கும். மாணவர்கள் போட்டி, பந்தயம் ஆகியவற்றில் கலந்து கொண்டு வெற்றி பெறுவார்கள். உங்களது மதிப்பும் அந்தஸ்தும் உயரும். இளைய சகோதரர்களால் உதவி கிடைக்கும்.

சனி பகவான் 10-ஆம் பார்வையாக உங்களது ராசிக்கு ஆறாம் இடத்தைப் பார்ப்பதால் உங்களுக்கு எதிரிகள் ஏற்படலாம். ஆனால் அவர்களை எளிதாக வெற்றி கொள்வீர்கள். எதிரிகளால் பாதிப்புகள் ஏற்படாது. உடலில் நோய் உண்டானாலும் தானாக நிவர்த்தியாகிவிடும். வம்பு, வழக்கு, கோர்ட், பஞ்சாயத்து ஆகியவற்றில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து உங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளே வரும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்கடங்கி இருக்கும். கேட்ட இடங்களில் கடனும் கிடைக்கும். உதவியும் கிடைக்கும்.

உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2009- செப்டம்பர் முதல் பத்து மாதகாலம் சனி பகவான் மகர ராசிக்கு 8-க்குடைய சூரியன் சாரத்தில் (உத்திரம்) சஞ்சாரம் செய்வார். ராசிக்கு 8-க்குடையவர்- சனி நின்ற ராசிக்கு 12-க்குடையவர். ஆகவே இக்காலம் விரயம், வீண் அலைச்சல், தண்டம், தீர்வை, ஏமாற்றம், இழப்பு, விபத்து ஆகிய பலன்களையே சந்திக்கக்கூடும். சனிக்கிழமைதோறும் அவரவர் வயதுக்கேற்ற எண்ணிக்கையளவு மிளகு எடுத்து, ஒரு புதுத்துணியில் பொட்டலம் கட்டி, கால பைரவர் சந்நிதியில் மண்விளக்கில் நெய் நிரப்பி மிளகு தீபம் ஏற்றி வழிபடவும். 19 சனிக்கிழமை நெய்தீபம் ஏற்றினால் புயல்போல வரும் துன்பம் பனிபோல விலகும்.

அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்:
2010- ஜூலை முதல் 14 மாதகாலம் மகர ராசிக்கு 7-க்குடைய சந்திரன் சாரத்தில் சனி சஞ்சாரம் செய்வார். கடந்த பத்து மாதம் அனுபவித்த கஷ்டத்துக்கு இது ஆறுதல் பரிசு தரும் காலமாக அமையும். சுபவிரயம், புதிய தொழில் வாய்ப்பு, குடும்பத்தில் நிம்மதி, ஒற்றுமை உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்:
2011- செப்டம்பர் முதல் ஆறு மாதகாலம் சனிபகவான் செவ்வாயின் சாரத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். மகர ராசிக்கு செவ்வாய் 4, 11-க்குடையவர் என்பதால் தேக ஆரோக்கியம், பூமி, வீடு, வாகன மாற்றம் அல்லது யோகம், கல்வி முன்னேற்றம், பதவி யோகம் எதிர்பார்க்கலாம்.

உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு
இந்த சனிப் பெயர்ச்சி சோதனை, வேதனை நிறைந்ததாகவும் ஏமாற்றம், இழப்பு, விபத்து இவற்றைத் தருவதாகவும் இருக்கும். தெய்வ நம்பிக்கையுடனும் ஒழுக்கம் கட்டுப்பாடாகவும் செயல்பட்டால் சனி பகவான் அனுதாபத்தைப் பெற்று சிரமங்களைத் தவிர்க்கலாம்.

திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு
இந்த சனிப் பெயர்ச்சி உயர்வு- தாழ்வு, நன்மை- தீமை, ஏற்றம்- இறக்கம், வரவு- செலவு என்று இரண்டையும் கலந்த பலன்களைத் தரும். கையளவு இதயத்தில் கடல் அளவு ஆசைகள் உதயமாகும். ஆனால் ஒன்றோ இரண்டோதான் நிறைவேறும். மனதைத் தளரவிடாமல் நம்பிக்கையோடு செயல்பட வேண்டும்.

அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு நல்லதைச் செய்யும். தடைப்பட்ட கல்வியைப் பூர்த்தி செய்து பட்டம் பெறலாம். புதிய பதவிகள் கிடைக்கும். தொழில் யோகம், வேலை யோகம் அமையும். தேக நலனும் பலமடையும். தாய் சுகம், தன் சுகம், பூமி, வீடு, வாகன சுகம் ஏற்படும். ஜாதக தசா புக்திகளை அனுசரித்து யோகம் கூடும்.

பரிகாரம்
புதுச்சேரியில் பஞ்சவடி ஆஞ்சனேயர் பிரம்மாண்டமாக இருக்கிறார். சனி பகவானின் கெடுதல்களை வடிகட்டி நல்லதாக மாற்றும் வல்லமை ஆஞ்சனேயருக்கும் கால பைரவருக்கும்தான் உண்டு. பஞ்சவடி ஆஞ்சனேயரை வழிபடவும்.